Russia – Ukraine ceasefire: போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இரவு நேரங்களில் ஏவுகணைகளை வீசி இருநாடுகளும் மோதின. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியின் கீழ் தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ”அமைதியை நோக்கி செல்வதற்கான தீவிர பேச்சுவார்த்தை நடத்த தயார். மே 15ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம்” என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் உடன் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இப்போது முடிவு உக்ரைன் அதிகாரிகள் கையில் இருக்கிறது. அவர்கள் தங்கள் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.