கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த மக்களவை தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால், சீமான் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதனால், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8% வாக்குகளுக்கு மேல் பெற்றதால் 2025 ஜனவரி 10ஆம் தேதி அக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தில், “தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது” என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தான், நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.