கடந்த ஆண்டு மட்டும் தினசரி 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் எனும் தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31,267 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில், அதிகளவாக ராஜஸ்தானில் 637 கற்பழிப்பு வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 2,947 வழக்குகளும், மராட்டியத்தில் 2,496 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 2,845 வழக்குகளும், டெல்லியில் 1,250 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதேபோல பெண்களுக்கு எதிரான 4,28,278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு சராசரியாக 49 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிக அளவில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 56 ஆயிரத்து 83 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் கற்பழிப்பு, கற்பழிப்பு கொலை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, தற்கொலைக்கு தூண்டுதல், கட்டாய திருமணம், ஆள்கடத்தல் போன்றவை அடங்கும். மேலும், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 52,947 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5% அதிகமாகும். இவற்றில் 70 சதவிகித இணைய குற்ற வழக்குகள் தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 15 இணைய பயங்கரவாத வழக்குகளும் அடங்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.