விஜய், சிவகார்த்திக்கேயன், சதிக்குமார் படங்களில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயில் தனது 73வது வயதில் காலமானார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் அறிமுகமாகி பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய்-ன் வில்லு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சுந்தரபாணிடியன், காளை, கண்டேன் காதலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. பாட்டி கதாபாத்திரங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் பரவலான கவனத்தை பெற்ற மூத்த நடிகை பெருமாயி, தனது 73வது வயதில் இயற்கை எய்தினார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது மரண செய்தி திரையுலகை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் திரையுலகினர், ரசிகர்கள், குடும்பத்தினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருக்கு ஒரு மகனும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.