சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற திருத்தலமாக இருப்பது கோட்டை மாரியம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 27ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவினை முன்னிட்டு ஏராளமான வைபவங்கள் நடத்தப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதினால் சேலம் முழுவதும் தற்போது விழாக்கோலம் போல காட்சியளிக்கின்றது. கோவிலின் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றது.
வருடம் தோறும் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்தான். ஏனென்றால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதினால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோலவே தற்போது நடைபெறும் கும்பாபிஷேக விழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால், வரும் 27ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கும் அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.