வாணியம்பாடியில் இயற்பியல் தேர்வன்று ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய மாணவி சுஹாசினி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளார் தெரியுமா..?
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இறுதிநாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வை எழுதுவதற்காக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி சுஹாசினி, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது, வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்ற அச்சத்தில், பேருந்தை பின் தொடர்ந்து ஓடி, படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, ஆபத்தான முறையில் நீண்ட நேரம் ஓடினார். வெகு தூரம் மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்தை நிறுத்தினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது, இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவி சுஹாசினி, பெற்ற மதிப்பெண்களின் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, மாணவி சுஹாசினி தமிழில் 93 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 68 மதிப்பெண்களும், இயற்பியலில் 61 மதிப்பெண்களும், வேதியியலில் 56 மதிப்பெண்களையும், தாவரவியலில் 81 மதிப்பெண்களும், விலங்கியலில் 78 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 12ஆம் வகுப்பில் மொத்தமாக அவர் எடுத்த மதிப்பெண் 437 ஆகும்.