சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 2.5 லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், விடுமுறை நாட்களில் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 1-ல் இயக்கப்படும் ரயில்களின், குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை 3 பொது பெட்டிகளும், ஒரு மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில், அதோடு இரண்டு பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக மெட்ரோ ரயிலில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 1-ல் விமான நிலையம், கோயம்பேடு, சென்ட்ரல், விம்கோ நகர் வரை 54 கிலோ மீட்டர் நீளத்துக்கு இயக்கப்படுகிறது. இரு மாதத்தில் பெட்டிகளை இணைப்பதற்கான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், 2 வருடத்திற்குள் சென்னை மெட்ரோ ரயில் 1-ல் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான பயணிகளை ஒரே ரயிலில் ஏற்ற முடியும். மெட்ரோ ரயிலில் இரண்டு பெட்டிகளை இணைக்கும் போது ரயிலின் நீளம் மாற்றம் அடைவதால் மொத்த மெட்ரோ மென்பொருள் அமைப்பிலும் மிகப்பெரிய மாற்றம் செய்ய வேண்டிய பணி இருப்பதாகவும், இதனால் பணிகள் முடிவடைந்து விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் நடைமுறைக்கு வர 1.5 முதல் 2 வருடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.