பாகிஸ்தானில் இருந்து வெளியிடப்படும் ஊடக உள்ளடக்கங்கள் தொடர்பாக ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள்- 2021-ன் பகுதி-II, இணையதள உள்ளடக்க வெளியீட்டாளர்களுக்கான (ஓடிடி தளங்கள்) நெறிமுறைகளை வழங்குகிறது. இதன்படி எந்தவொரு உள்ளடக்கத்தின் தாக்கங்களையும் முறையாகக் கருத்தில் கொண்ட பிறகு, அதனை வெளியிட வேண்டும். பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொண்டு, உரிய எச்சரிக்கையுடன் செயல்பட்டு பின்வரும் அம்சங்களைக் கொண்ட உள்ளடக்கங்களை தவிர்க்க வேண்டும்.
அதாவது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது. நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும், ஆபத்தை விளைவிக்கும் அல்லது ஆபத்தில் ஆழ்த்தும் உள்ளடக்கம் இருக்க கூடாது. நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் கூடாது. வன்முறையைத் தூண்டும் அல்லது பொது ஒழுங்கைப் பாதிக்கும் உள்ளடக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில், 22.04.2025 அன்று, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பல இந்தியர்களும், ஒரு நேபாள நாட்டைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்கள், ஊடக ஒலிபரப்பு தளங்கள் போன்றவை பாகிஸ்தானிலிருந்து கிடைக்கப்பெறும் வலைத் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள், பிற ஊடக உள்ளடக்கங்களை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.