திருட வந்த இடத்தில் பண மூட்டையுடன் திருடன் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர் சமந்தாராய் (42). மென் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு சென்றுள்ளார். இதனால் வீட்டில் யாருமில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, தங்கள் கையில் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு திறக்கவில்லை. இதனால் சாவி செய்யும் கடையை அணுகி வேறு சாவி செய்ய சொல்லி, அதை வைத்து கதவை திறந்துள்ளனர்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பீரோவை திறந்து பார்த்தபோது பல லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பதறிப்போன தம்பதியினர், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பூஜை அறையை திறந்தபோது, அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் பண மூட்டை, வீட்டை உடைப்பதற்கு கொண்டு வந்த ஆயுதங்கள் உள்ளிட்டவை இருந்தது.
இதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது புகைப்படம் காவல்துறை வட்டாரத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் அசாம் மாநிலத்தை திலீப் பகதூர் (45) என்பதும், கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் இங்கு பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் வீட்டில் கொள்ளையடிக்க வந்ததும் இவர் தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இருப்பினும், திருட வந்த இடத்தில் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ? என்பது குறித்தும், இது உண்மையில் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.