மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை, மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
ஒரு நபருக்கு தெரியாமல், அவரது சொத்தை இன்னொரு நபர், வேறு பெயர்களில் பதிவு செய்து அபகரிப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது… இதே போல் ஒரே இடத்தை பல நபர்களுக்கு பதிவு செய்து கொடுப்பதும் போன்ற மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர், காவல் துறையில் புகார் அளித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி, காவல் துறை விசாரணையில் மோசடி நடந்தது உறுதியாகும் நிலையில், அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், ‘உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வந்தால் தான் பத்திரத்தை ரத்து செய்வோம்’ என சார் – பதிவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முடிவு கட்டும் வகையில், பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, கடந்த ஆண்டு சட்டசபையில் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் சமீபத்தில் கிடைத்து உள்ளது. அதன்படி, மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் வழிமுறைகளுக்காக, பதிவு சட்டத்தில், ஐந்து பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆக., 16 முதல் இச்சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இப்புதிய விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்டவர்கள் முறையான நிவாரணம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் – பதிவாளர்கள், அது தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டு, சிறை செல்லவும் இந்த சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது..