சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தின் மையப் பகுதியில் 19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 400 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கட்டடம் ஒன்று உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய அரசு 100 மைல் நீள ஸ்கை ஸ்கிராப்பர் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. சவுதி விஷன் 2030 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத் நகரின் மையப் பகுதியில், தி முகாப்’ என்ற பெயரில் ஒரு மெகா கட்டிடம் உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எம்பயர் எஸ்டேட் என்ற கட்டிடம் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக விளங்கிவரும்நிலையில் அதை விட 20 மடங்கு பெரிய கட்டிடமாக சவுதியில் அமைக்கப்படவுள்ள இந்த பிரமாண்ட கட்டடம் இருக்கும் என்றும் 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 400 மீட்டர் உயரத்தில் இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமையான பகுதிகள், நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான பாதைகள், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு தேவையான அனைத்து வசதிகள், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அம்சங்களும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டிடத்தின் உள்ளே அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் அம்சங்களைக் கொண்டது என்றும் திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு கலாச்சார அரங்குகள் என 80-க்கும் மேற்பட்ட கலாச்சார மையங்கள் இருக்கும் என்றும் சவுதி அரேபியாவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதவிர 1.04 லட்சம் குடியிருப்புகள், 9,000 ஓட்டல் அறைகள், 9.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் சில்லறை வணிக கடைகள், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடங்கள், 6.2 லட்சம் சதுர மீட்டர் ஓய்வு மையங்கள், 18 லட்சம் சதுர மீட்டர் சமுதாய மையங்களும் இதில் அமைய உள்ளன. இதன் கட்டுமானப் பணி 2030-ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3.34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய உட்புற நகரமாக இந்த கட்டிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், டிஜிட்டல் மற்றும் மெய் நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஹாலோகிராபிக்ஸ் மூலம் இந்த கட்டிடத்தின் டிசைன் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.