தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள்தான் கடிப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.கே.பிஜு என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டதாகவும், அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் 12 வயது சிறுமி ஒருவர் நாய் கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற காரணங்களால் தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தெரு நாய்களுக்கு உணவு வைப்பவர்கள்தான் அந்த நாய்கள் பொதுமக்களை கடிக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். மேலும், அதற்கான பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும். கடிபட்டவர்கள் சிகிச்சை பெறும் செலவையும், பராமரிப்புச் செலவையும் நாய்க்கு உணவளிப்பவர்கள்தான் ஏற்கவேண்டும்” எனக் கூறினர். மேலும், இந்த வழக்கில் வரும் 28ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி இந்த வழக்கை ஒத்துவைத்தனர். நீதிபதி தெரிவித்த இந்த கருத்து தெரு நாய்களுக்கு உணவளிப்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.