செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளைநடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், நாளை காலை முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் தேவை ஏற்பட்டால், டிமலஸ் சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல், ஈவேகி சம்பத் சாலை ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து, ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. வணிக நோக்கத்திற்கான வாகனங்கள் ஈவேரா சாலை கெங்கு ரெட்டிச்சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல் பிராட்வேயில் இருந்து வணிக நோக்கத்திற்காக வரும் வாகனங்கள் குறளகம், தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும்.
இவ்வாறு திருப்பி விடப்படும் வாகனங்கள், வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட வழிகளைத் தவிர்த்து, பிற வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய பொதுமக்கள், தங்களது பயணத் திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.