சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்கள் அனைத்துமே வெள்ள நீரால் மூழ்கி இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஒரு ரயில் செல்லக்கூடிய பகுதி தடைபட்டு, பயணிகள் ரயிலில் தவித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தான் இதை கண்காணிப்பதற்காக பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் வைக்கப்பட்டிருந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கட்டுப்பாட்டு மையமானது அமைக்கப்பட்டதை போல நெல்லை, தூத்துக்குடியிலும் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து, அங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகளை நேரடியாக கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் அந்த கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கு மின் இணைப்பு முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய நெட்வொர்க்களும் தற்போது வேலை செய்யவில்லை. அதன் காரணமாக அங்கு இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களை நேரடியாக சேட்டிலைட் போன் மூலமாக தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.