ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதற்கிடையே, இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
போர்க்கால ஒத்திகை என்பது, எதிரி நாட்டின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, ஆயுதக்கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை மறைப்பது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது என்பது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிப்பது. மேலும் போர்ச்சூழலை உளவியல் ரீதியாக எதிர்கொள்ள தயார்படுத்துதலும் இதன் ஒரு பகுதியாகும்.
244 சிவில் பாதுகாப்பு இடங்களுடன் கூடுதலாக சில இடங்களையும் சேர்த்து நாடு முழுவதும் 259 இடங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கத்தில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. கல்பாக்கத்தில் வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது கயிறு மூலம் உயரமான கட்டடங்களுக்குள் இருந்து மக்களை இறக்கியும் வெடிச்சப்தம் கேட்டதும் எவ்வாறு இருக்கும் இடத்திலேயே தரையில் அப்படியே படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் செய்துகாட்டப்பட்டது.
தலைநகர் டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களிலும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இங்கு சைரன்களை ஒலிக்கச் செய்து மக்களை ஓரிடத்துக்கு அழைத்துச செல்வது, போன்று நடத்திக்காட்டப்பட்டது. போர்ச் சூழலின்போது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் மக்கள் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுளள்து.
Read more: விடுமுறை ரத்து.. விடுப்பில் இருக்கும் ராணுவ வீரர்களை திரும்ப அழைக்க அமித்ஷா உத்தரவு..!!