புகழ்பெற்ற பின்னணி பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் இவரை பேமஸ் ஆக்கியது வசீகரா பாடல் தான். இப்பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பாம்பே ஜெயஸ்ரீயின் இனிமையான குரல் தான். தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வரும் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரது இசையில் பல்வேறு சூப்பர்ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். சினிமாவில் பாடுவது மட்டுமின்றி, இசைக்கச்சேரிகள் நடத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில், அண்மையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இசைக் கச்சேரி ஒன்றை நடத்த இருந்தார்.
அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்த அப்டேட்டும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று காலை பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில், மருத்துவ சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஜெயஸ்ரீ உடல்நலம் நன்கு தேறி வருகிறார். என்.ஹெச்.எஸ் ஊழியர்கள் சிறப்பாக பார்த்துக்கொள்கிறார்கள். இந்திய அரசும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.