ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பது தொடர்பான கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்தார்.
திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமாரிடம், தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படும் ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை முதலில் அரசிடம் கேளுங்கள். சரத்குமார் நடிப்பது பற்றி இரண்டாவது கேளுங்கள். ஆன்லைன் ரம்மியை நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் இப்போது சொல்கின்றன. ஆனால், ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் சூதாட்டம் பல விதத்தில் மக்களுக்கு பாதிப்பு என முதலில் இருந்தே கூறி வருகிறோம்.
ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் விளம்பரத்தை கட்டுப்படுத்துவது அரசுதான். எனவே, அரசு முடிவு எடுத்து ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட ஒன்று என சொன்னால், தடை செய்ததை நான் எப்படி பயன்படுத்துவேன்? தடை செய்த ஒன்றுக்கு நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். நீங்கள் (அரசு) தடையே செய்யவில்லையே. நீங்கள் தடை செய்யுங்கள், அது தானாக நிறுத்தப்படும். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்கிறார் என்று எப்படி சொல்வீர்கள்? ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல, கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளன. அதுவும் சூதாட்டம்தான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான் இதிலிருந்து அனைவரும் விடுபட முடியும்.
குடிப்பழக்கம் குடியை கெடுக்கும். ஆனால் குடிக்காமல் இருக்கிறார்களா? குடிக்காதீர்கள் என நானும் தொடர்ந்து கூறி வருகிறேன். இதேபோல் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு. ஆனால், தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை? எனவே உலகத்தில் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப்பார்த்து கெட்டுப்போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நல்லவையும் இருக்கின்றன, தீயவையும் இருக்கின்றன. நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறோம். நாம் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள்”. இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.