பகுதி நேர வேலை மோசடியில் சிக்கி பெண் ஒருவர் சுமார் ரூ.5.3 லட்சத்தை இழந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த 39 வயதான டாப்னே பெர்னாண்டஸ் என்ற பெண், சமீபத்தில் வேலை தேடும் இணையதளங்களில் தனது பயோ-டேட்டாவை வெளியிட்டு, வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகளைத் தேடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஒரு ஆட்சேர்ப்பு போர்ட்டலில் இருப்பதாகக் கூறும் நபரிடமிருந்து அவருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது. அந்த நபர், யூடியூப்பில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் பார்வைகளையும், பின்தொடர்வதையும் அதிகரிக்க எளிய ஆன்லைன் பணிகளைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.. அதற்கு டாப்னேவும் ஒப்புக்கொண்டுள்ளார்..

முதலில் டாப்னேவுக்கு ஒரு சில பணிகள் கொடுக்கப்பட்டன.. அவர் அதை 1 மணி நேரத்திற்குள் முடித்துள்ளார்.. உடனடியாக அவருக்கு ரூ.2,800 பணம் அனுப்பப்பட்டுள்ளது.. இதனால் டாப்னேவுக்கு வேலை வழங்கிய நபர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, அதிக தொகையை முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.. டாப்னேவும் அதற்கு விருப்பம் தெரிவித்து, அந்த மோசடி நபர் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தொடங்கி உள்ளார்..
அதன்படி கடந்த திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய் இரவு வரை, டாப்னே பல்வேறு இணையப் பக்கங்களில் மொத்தம் ₹5.31 லட்சத்தை செலுத்தியுள்ளார். எந்த நேரத்திலும் தனது ‘கமிஷனுடன்’ தனது ‘முதலீட்டை’ திரும்பப் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.. ஆனால் அதிக பணம் செலுத்தினால் அவளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
நெட் பேங்கிங் மற்றும் UPI வாலட்கள் மூலம் வெவ்வேறு கணக்குகளில் அப்பெண் பணத்தை செலுத்தி உள்ளார்.. ஆனால் அவருக்கு எந்த லாபமும் திரும்ப கிடைக்கவில்லை.. டாப்னே பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மோசடி செய்த நபர், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டார்.. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது அப்பெண்ணுக்கு தெரியந்துள்ளது.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை போலீஸாரிடம் சென்று பண மோசடி குறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய சிம் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் தொழில்நுட்ப விசாரணைகளையும் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்..