சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் டைம்ஸ் ஹெல்த் கேர் அச்சுவர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், சிறப்பாக செயலாற்றிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தேசிய தர நிர்ணய ஆணையத்தால் 2013 முதல் தற்போது வரை 488 விருதுகள் தமிழக அரசு பெற்றுள்ளது. அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூ.38 கோடி மதிப்பில் ரோபோடிக்
கேன்சர் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை ரூ.1,000 கோடியில் கட்டப்பட்டது.
மக்களை தேடி மருத்துவம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரக காப்போம் திட்டம்
உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் அகில உலக மருத்துவ மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. உலகில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் இந்த மாநாட்டின் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.