திருவண்ணாமலை மாவட்டம் பேகோபுரம் 5-வது தெருவில் வசித்து வந்தவர் விஜயா (65). இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டில் கணவனை இழந்த காஞ்சனா என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேலு (38) என்பவருடன் காஞ்சனாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக காஞ்சனா, சரியான முறையில் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் விஜயா, வாடகை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனியாக வசித்து வரும் மூதாட்டியை கொலை செய்துவிட்டு சொத்தை அபகரிக்க காஞ்சனா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டார். அதன்படி, வீட்டின் உரிமையாளரான மூதாட்டி விஜயாவை இருவரும் சேர்ந்து அடித்தே கொன்றுள்ளனர்.
பின்னர், மூதாட்டியின் உடலை ஞானவேல் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தச்சம்பட்டு பகுதியில் உள்ள காப்புகாட்டு வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனையடுத்து, பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் சொத்துக்காக காஞ்சனாவும், ஞானவேலுவும் சேர்ந்து மூதாட்டி விஜயாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.