நாயின் புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குராரு மண்டல அலுவலகத்துக்கு, டாமி என்ற நாய்க்கு, சாதி சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பத்துடன் நாய் பெயரிலான ஆதார் அட்டையின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆதார் அட்டையில், பெயர் டாமி, பிறந்தநாள் 14.04.2022, முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில், ‘ஆதார் – சாதாரண மனிதனின் அதிகாரம்’ என்று இருக்கும். இந்த டாமிக்கான ஆதார் அட்டையில், ‘ஆதார் – சாதாரண நாயின் அதிகாரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பதை நிராகரித்த குராரு மண்டல அதிகாரி சஞ்சீவ் குமார் திரிவேதி, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், இந்த குசும்பை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.