கோவையில் பாஜகவின் அணி பிரிவுகள், மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசை கடுமையாக விளாசினார்.
அவர் பேசுகையில், “நாங்கள் 20 ரூபாய் வரி கட்டினால் அதிலிருந்து 2 ரூபாய் கூட கிடைப்பதில்லை என திமுகவினர் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் கோவை தான் அதிகபட்சமாக வருவாயை ஈட்டி தருகிறது. நாங்கள் செலுத்தும் வரி எங்களுக்கே வர வேண்டும் என்று கோவை மக்கள் கேட்டால், மற்ற மாவட்டம் என்ன ஆகும்? திமுகவினரை பார்த்து நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன செய்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்புங்கள்.
பிரதமர் மோடி யாருக்கும் குறை வைக்காமல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு நன்மை வந்து விடக் கூடாது. அப்படி நடந்தால் பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் போய் சேரக் கூடாது என்பதற்காக ஒன்றாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு நம்பர் பலம் இருப்பதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
பி.எம் ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும் கேட்டு பெற்று வருகின்றன. கேரளாவில் கூட கேட்டிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு, போராட்டம் தான். நீட் தேர்வு பற்றி என்ன சொன்னார்கள்? ஆட்சிக்கு வந்த உடன் தூக்கி எறிந்து விடுவோம் என்றார்கள். ஆனால் வந்ததும் நீட் தேர்வின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டனர். தேசியத்தையும், ஆன்மீகத்தையும் மனதில் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தும் ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றார்.
SIR குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், SIR இப்போதுதான் புதிதாக நடைபெறுவது போல பேசிக் கொண்டிருக்கின்றனர். 2004 வரை 7, 8 முறை SIR நடைபெற்றுள்ளது. கொளத்தூர் ஒரு தொகுதியிலேயே குழப்பத்திற்கு உரிய வாக்குகள் நிறைய இருக்கின்றன. இவை இறந்தவர்களுடையதா, வெளியூருக்கு சென்றவர்களாலா என்பதை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். அதற்கு SIR வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



