2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து ரூ.1928.56 கோடி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை 2020-21ம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்காட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும் என துணை முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். அந்த வகையில் கடந்த மாதம் 2வது தவணையாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் 3வது தவணையாக ரூ.335.41 கோடியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும், கொரானா நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.