ராஜஸ்தானில் நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அதைவிட அதிகமாக மக்கள் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவருகின்றனர். அடிமையாவது மட்டுமல்லாமல் இவை தற்கொலை சம்பவங்களுக்கும் வழிவகுக்கின்றன.

ப்ளுவேல், பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இன்றைய கால இளைஞர்கள் வேகமாக அடிமையாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்கொலை சம்பவங்களும் அரங்கேறிவருகின்றது. அந்தவகையில் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாடி மனவுளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளான்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாப்பகுதியில் 14 வது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை இமாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கிய அந்த சிறுவன் தொடர்ந்து அதை விளையாடுவதிலேயே ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.
நேற்று பின்னரவு 3 மணி வரை கேம் விளையாடி கொண்டிருந்தவர் காலையில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டு ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர், ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளார். சிறுவன் பப்ஜி விளையாட்டால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.