டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை இந்தியா முடக்கியதற்கு பதிலாக, இந்திய தளங்களை சீனா முடக்கியுள்ளது.

கிழக்கு கால்வான் பகுதியில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 35 முதல் 40 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனா உடனான பொருளாதார உறவுகளை குறைக்கும் நோக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக மத்திய அரசு தடை செய்தது.
இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில், இந்திய தொலைக்காட்சிகள், ஊடகங்கள், இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. சீனாவில் வெளிநாட்டு இணையதளங்களை பயன்படுத்தவோ, பார்க்கவோ தடை இருந்தாலும், விபிஎன் பயன்படுத்தி இத்தனை நாட்களாக பயன்படுத்த முடிந்தது. இந்நிலையில், தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஐபோன்களில் விபிஎன் பயன்படுத்தியும் இந்திய இணையதளங்களை பயன்படுத்த முடியவில்லை என தகவல்கள் வந்துள்ளன.

இண்டர்நெட் கட்டுப்பாடுகளையும் தகர்த்து சேவைகளை பயன்படுத்த விபிஎன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், விபிஎன்களையும் முடக்கும் வகையில் சீனா நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவிற்கு பெரிய பின்னடைவு ஏதும் இல்லை என்றே கூறபடுகிறது.
தற்போது, சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், இந்திய தளங்களை சீனா முடக்கியுள்ளது. ஒருபுறம் பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் இப்படி தடைகள், கட்டுப்பாடுகள், முடக்கம் என கசப்புத்தன்மை வலுப்பெற்று வருகிறது.