
வேலூர்: வேலூரில் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களையும் மூடுவதற்கு எஸ்.பி பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வேலூர் வடக்கு மற்றும் பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே வரும் நாட்களில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 23 சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்துக் காவல் பிரிவு, 2 கலால் பிரிவுகளில் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்கள் மூடி வைக்கவும் எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த இரண்டு நாட்கள் காவல்நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும், காவல் நிலையத்துக்கு புகார் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களளின் வசதிக்காக காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் புகார் மனுக்களைப் பெட்டியில் செலுத்துவதற்கான ஏற்பாட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்டுள்ளார். காவலர்களுக்கு கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையிலும், காவல்நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு நாட்கள் காவல்நிலையங்களில் மனுக்களை பெறுவதற்கு, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு காவலரைப் பணியில் அமர்த்தி மனுக்களை பெட்டியில் செலுத்தவும், விசாரணை நடத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் தினமும் அனைத்து காவல்நிலையங்களிலும் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.