
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படாததன் அலட்சியத்தால் கிராமங்களில் கொரொனாவின் பாதிப்பு தொடக்கம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய காலக்கட்டத்திலிருந்து அமைதியான இயற்கை சூழலோடு, தனக்கான பணியினை செம்மையாக செய்து வந்தவர்கள் தான் கிராமத்து மக்கள். ஊரடங்கு காலத்தில் கூட காட்டு வேலைகளுக்கு செல்வது, வேலை இல்லாத நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டில் அமர்ந்து அல்லது உறவினர்களுடன் இணைந்து தாயம் விளையாடி வந்தவர்களையும் கொரோனா வைரஸ் தற்போது விட்டுவைக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஆம், சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அங்கு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அங்கு வேலை இல்லாமலும், உயிரினைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மக்கள் பலர் இ-பாஸ் எடுத்து அரசின் அனுமதியோடு சொந்த ஊருக்கு வரத் தொடங்கி விட்டனர். ஆனால் 50 சதவீத மக்களுக்கு உரிய அனுமதி கிடைக்காமல் சட்டவிரோதமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு வந்தவர்கள் கொரொனா பரிசோதனை செய்யப்படாமலேயே அவரவர் கிராமத்திற்கு சென்றுவிட்டனர். இத்தகைய செயல் கிராமத்தில் நிம்மதியாக வாழ்ந்து வந்தவர்களையும் பாதித்துள்ளது. தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதே நிலை தான் நீடித்துவருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தினை பொறுத்தவரை பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியம்பட்டி, டி.கல்லுப்பட்டி பகுதிகளில் வேகமாக கொரோனா வைரஸ் உள் நுழைந்து விட்டது.
எத்தனை நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் மக்கள் அதனை துச்சமாக மதிக்கவில்லை என்பதற்கு உதாரணம் தான் கிராமத்திற்குள் நுழைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு. கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களது உறவினர்களுக்கும் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு அப்பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக அடைக்கப்பட்டுவிட்டது.

தற்போது இதன் பாதிப்பு தெரியாமல் தெருக்களில் மக்களின் நடமாட்டம் அதிகரிக்கத்தான் செய்கிறது. மேலும் இப்பகுதியில் இருந்த பலர் அச்சமடைந்து உறவினர்களின் இல்லத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு நோயின் பாதிப்பினை உணராமல் செல்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்ற குரலும் ஓங்குகிறது.
“தமிழகத்தில் கிராமப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்பினை எந்தவித தயக்கமும் இன்றி பேரூராட்சி, கிராமப்பஞ்சாயத்து அமைப்புகள்” மேற்கொள்ள வேண்டும்.”
“கிராமங்கள் என்பதால் எங்கிருந்து யார் யார் வந்தார்கள்? என்பதை விரைவில் கண்டறிய வேண்டும்.”
மேலும் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் “தமிழகத்தில் கிராமப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்பினை எந்தவித தயக்கமும் இன்றி பேரூராட்சி, கிராமப்பஞ்சாயத்து அமைப்புகள்” மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் எந்தவித அறிவிப்புக்கும் காத்திருக்காமல், கடைகளின் நேரத்தினை குறைக்க வியாபார சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், கிராமங்கள் என்பதால் எங்கிருந்து யார் யார் வந்தார்கள்? என்பதை சுலபமாக கண்டறிய முடியும். எனவே இதுபோன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே மற்ற மக்களுக்கு நோய் பரவல் வராமல் எளிதில் காக்கமுடியும்.

இது போன்ற நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள அரசு தவறும் பட்சத்தில் கிராமங்களில் நுழையும் கொரோனாவினை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் இக்கட்டான நிலைக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தான் நிதர்சன உண்மை.