உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது பெரும்பாலான உலக நாடுகள் முழுவதும் பரவி மனித குலத்தையே மிரட்டி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 கோடியை கடந்துள்ளது.

உலக நாடுகள் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த, பரிசோதனைகளை தீவிரப்படுத்தி வருவதால் நாள்தோறும் ஏராளமான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த செய்தியை பதிவிடும் சமயத்தில், உலக அளவிக் எண்ணிக்கை தற்போது 1,00,82,615 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 5,01,309 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54,58,523 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் மொத்த பாதிப்பில் 25% இடம்பெற்றுள்ளது. அதன்படி அங்கு (பாதிப்பு – 25,96,537 பேர், உயிரிழப்பு – 1,28,152 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு – 13,15,941 பேர், உயிரிழப்பு – 57,103 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு – 6,27,646 பேர், உயிரிழப்பு – 8,969 பேர்) உள்ளன. நான்காவது இடத்தில் இந்தியா நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.