இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,000ஐ கடந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை, கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இதன் காரணமாக உலகளவிலான கொரோனா பாதிப்பில் தற்போது இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 6 நாட்களாக சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் 16,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152- ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,972-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 251-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 633 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,395-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13,503 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.