கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலக அளவில் அபாயகரமான அணியாக ஒரு காலத்தில் அறியப்பட்டது தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ஆனால் அந்த அணி தற்போதும் அதே நிலையில் இல்லை என்பதே உண்மை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 2 அணிகளும் மோதுகின்ற நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மார்னஸ் லபுஷேனும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஒன்றிணைந்து அணியின் ஸ்கோரை அதிகப்படுத்தினர். அடுத்ததாக வந்த பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால், அந்த அணி 177 ரன்களில் முதல் இன்னிங்சை பறிகொடுத்தது இந்திய அணியின் சார்பாக காயத்திலிருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மிகவும் அபாரமாக சதமடித்தார்.இந்திய அணியிலும் விக்கட்டுகள் தொடர்ந்து சரிந்து வர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து 88 ரன்கள் சேர்த்தனர். 2வது நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 327 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது.
இந்த நிலையில் இன்று மறுபடியும் களம் இறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாட தொடங்கியது. இந்திய அணியின் வீரர்கள் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா 70 ரன்னிலும், அக்சர் பட்டேல் 84 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக மிகவும் அதிரடியாக விளையாடிய முகமது சமி 47 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என 37 ரன்களை சேர்த்தார்.
ஆகவே இந்திய அணி 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் பறிகொடுத்தது. ஆகவே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 223 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் சார்பாக அதிகபட்சமாக புதிதாக களம் இறங்கிய டோட் முர்பி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.