சென்னையில் கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் கொண்டு வெட்டி எடுத்து தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் அகரம் சந்திப்பில் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஜெ.எல் கோல்ட் பேலஸ் என்ற நகை கடை உள்ளது. இந்த நகை கடையின் கீழ் தளத்தில் பார்க்கிங் வசதியும், முதல் தளத்தில் நகை கடையும் உள்ளது. இரண்டாவது தளத்தில் ஜெயசந்திரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு பணியாளர்கள் அனைவரும் சென்ற நிலையில் ஜெயச்சந்திரன் கடையின் ஷட்டரை மூடி விட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து, காலை கடைக்கு வந்து பார்த்த போது ஷட்டரின் ஒரு பகுதி வெல்டிங் மிஷின் மூலம் கட் செய்து இருப்பது கண்டு கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடு போனது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போலீசார், கொள்ளையர்களையர்கள் தேடிவருகின்றனர்.