தூத்துக்குடி மாவட்ட பகுதியில் நயினார்புரம் கிராமத்தில் தேவராஜ், அவரது மனைவி சண்முகத்தாய் மற்றும் பெண் குழந்தைகளான சுடலைக்கனி, வள்ளி மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இரண்டு வாரத்திற்கு முன்னர் சண்முகத்தாய் உடல் நலமின்மை காரணமாக உயிர் இழந்து விட்டார். அவரின் 16ம் நாள் (நேற்று) காரிய நாளிற்கு வந்த உறவினர்கள் மற்றும் தேவராஜ் மூத்த மகள் சுடலைக்கனியை சிவகளை பெரிய குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அதே நேரத்தில் கோகிலா என்ற சிறுமி அங்கு குளித்துக் கொண்டிருந்த போது சகதியில் சிக்கிக்கொண்டார். இதனை பார்த்த சுடலைக்கனியும் அவரை காப்பாற்ற உள்ளே இறங்கியுள்ளார். இதனையடுத்து இருவருமே சகதியில் மாட்டிக் கொண்டனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றனர். மேலும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள்ளாக சுடலைக்கனியை மட்டும் அங்கிருந்தவர்கள் சுயநினைவின்றி மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். வழியிலேயே சுடலைக்கனி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் தேடிய நிலையில், கோகிலாவை சடலமாக மீட்டெடுத்தனர்.
இதனை தொடர்ந்து இருவரது உடலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.