டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியுடனான முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி நுழைந்துள்ளது. இந்தச் சூழலில் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் கடைசி நாளன்று வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது பவுலிங், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் தரமான அணியாக தகவமைத்துக் கொண்டுள்ளது பாகிஸ்தான்.
இந்நிலையில், அரையிறுதி போட்டியில் வெற்றிக்கு பிறகு இறுதியில் யாரை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள். இந்தியா அல்லது இங்கிலாந்து என்ற கேள்வி, ஷதாப் கான் இடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்திய அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒரு அரைசதம் மற்றும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் ஷதாப். பாகிஸ்தான் அணிக்கு ஆல் ரவுண்டராக முக்கியமான பங்களிப்பை அவர் அளித்து வருகிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று இரண்டாவது அரையிறுதியில் விளையாட உள்ளன. இதில், வெல்லும் அணி பாகிஸ்தான் அணியுடன் வரும் ஞாயிறு அன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.