அவமானத்திற்கு பயந்து 4 கொடூரன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மகளை, வீட்டில் சேர்க்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஹிரன் மங்க்ரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 22 வயது மாற்றுத் திறனாளி பெண் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். அங்கிருந்த உள்ளூர் மக்கள் அந்த பெண்ணின் நிலை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். வாய் பேச முடியாத அந்த பெண் காப்பகத்தில் தங்க விரும்பாமல் அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு, சுவர் ஏறி குதித்துள்ளார். அப்போது பெண் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது தான் அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
பின்னர் சைகை மொழி நிபுணரை வரவழைத்து விசாரித்த போது, அந்த பெண்ணை 4 ஆண்கள் பல்வேறு சமயங்களில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து பெண்ணின் பின்புலம் குறித்து விசாரித்து அவரது குடும்ப விவரத்தை காவல்துறையினர் பெற்றனர். அதன் அடிப்படையில், பெண்ணின் தாயை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்துள்ளனர். அப்போது தான் மேலும் அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது. அந்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான விஷயம் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால், அவமானத்திற்கு பயந்து இதை வெளியே தெரிவிக்காமல் பெண்ணையும் வீட்டில் சேர்க்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக வாக்குமூலம் தந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.