தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பள்ளிகள், கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் இருந்து முழுமையாக செயல்பட துவங்கியுள்ளன. இதனால், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மாவட்ட வாரியாக இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இம்முறை பச்சை நிறத்துக்கு பதிலாக, நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தற்போது, உதிரிபாகங்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. விரைவில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.