எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கையில் நிர்வாகம் இருக்கிறதா என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்!
இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை, தமிழக முதலமைச்சரே தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளர்.
மேலும் “ ஜூன் 12 அன்று, கொரோனா தொற்று எண்ணிக்கை 40,000-ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 28,000க்கும் அதிகமான நோய் தொற்றாளர்கள் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 367. ஆனால் இந்த நோய்த் தொற்று காலத்தில், அதிமுக அரசின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கைகளும், அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் 19 பாசிட்டிவ் நோயாளிகள், இறந்திட நேரும் போது, ‘நெகட்டிவ்’ என்று குறிப்பிடப்படுவது. தலைமை செவிலியர் ஜோன் மேரியின் கேஸ் ஷீட்டில் பாசிட்டிவ் என்றிருந்த நிலையில், இறப்பு அறிக்கையில் நெகட்டிவ் என ஏன் மாற்றப்பட்டது என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை..
வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றாலும், குடும்பத்தினர் அனைவரும் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள்.. பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை என்றெல்லாம் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினால், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் என்ற பெயரில் மேலும் குழப்புகிறார்.
ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்..? முடிவுகளை யார் எடுக்கிறார்கள்..? அமைச்சர் – அதிகாரிகளிடையே போட்டியினால் இந்த குழப்பங்களா..? எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கையில் நிர்வாகம் இருக்கிறதா..? ஜூலை மாதத்தில் நோய்த் தொற்று கடுமையாக இருக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர், அரசு சார்பில் தெரிவிக்கிறார்.
ஆனால் முதலமைச்சரோ ஊடகத்தினரிடம் ஏகடியம் பேசி, அவரே மாஸ்க் அணியாமல், இடைவெளியின்றி விழாக்களில் பங்கேற்கிறார். நிலைமை கைமீறிப் போய் பேரிட சூழலில் இனியேனும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு, எத்தனை நோயாளிகள் – பரிசோதனைகள் – மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.