கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகன் இன்று உயிரிழந்தார்.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன், மூச்சுத்தினறல் காரணமாக கடந்த 2-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் வசதி கொண்டு சுவாசித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று முன் தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. காலை 8.05 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய் விதிகளின் படி அவரது உடல் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சென்னை கண்ணாமாப்பேட்டை மைதானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் எம்.எல்.ஏ ஒருவர் உயிரிழப்பது இதுவே முதன்முறையாகும். ஜே. அன்பழகன் 1958-ஆம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பிறந்தார். அவர் பிறந்த நாளிலேயே, உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.