உள்தேர்வு ஒன்றில் தேர்ச்சி பெறத் தவறிய நூற்றுக்கணக்கான ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகநிலை மதிப்பீடு தேர்வு எனப்படும் உள் தேர்வில் தோல்வியடைந்ததால், 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, 208 புதியவர்கள் இத்தேர்வில் தோல்வியடைந்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தத்தில், கடந்த சில மாதங்களில் இந்த தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால், சுமார் 600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை விவரங்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட மறுத்துள்ளது. முன்னதாக ஜூலை, 2022க்கு முன் சேர்ந்த புதியவர்கள் அகநிலை தேர்வில் தோல்வியடைந்த நிலையிலும், பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட புதியவர்கள் ஆஃபர் லெட்டரைப் பெற்று 8 மாதங்களுக்கும் மேலாக பணியில் சேர்வதற்கு காத்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, விப்ரோவில் இருந்து 800 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதற்கு 452 பேர் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.