பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 61.

இயக்குநர், எடிட்டர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமைக் கொண்ட ஏ.பீம்சிங்கின் மகன் கண்ணன். இவர் தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும், பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகவும் அறியப்பட்டவர். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோர கவிதைகள் கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றும் கூறும் அளவுக்கு, அவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவரே ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாள படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கண்களால் கைது செய்’ ஆகிய படங்களுக்காக கண்ணனுக்கு தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது. மேலும், ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய சகோதரர் பி.லெனின், தேசிய விருது பெற்ற எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் அவர் காலமானார். அவரின் மறைவுக்கு, திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.