சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் எங்கிருந்தும், எந்நேரத்திலும் பட்டா மாற்றம் செய்து கொள்ள இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எங்கிருந்தும், எந்நேரத்திலும் tamilnilam.tn.gov.in/citizen என்றஇணையதள முகவரியை உள்ளீடு செய்து இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணம், செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும்
இந்த புது சேவை மூலம், ‘பட்டா’ மாற்றத்துக்கு விண்ணப்பிக்க, தாசில்தார் அலுவலகம், பொது சேவை மையங்களுக்கு மக்கள் செல்ல வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற, நகர்புற நில ஆவணங்கள் கணினிபடுத்தப்பட்டு, ‘தமிழ் நிலம்’ எனும் மென்பொருள் மூலம் இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கணினிபடுத்தப்பட்ட வரைபடங்களை தனித்தனி நகர புலங்களுக்கான வரைபடங்களாக மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த புது வசதி மூலம் மக்கள் கிராமப்புற, நகர்புற நில வரைபடங்களை கட்டணமின்றி பெறலாம்.விண்ணப்ப நிலையை அறிய, https://eservices.tn.gov.in/ eservicesnew/login/Appstatus.html எனும், ‘லிங்க்’கில் உடனுக்குடன் அறியலாம். பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், மக்கள், பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா/சிட்டா, புலப்படம், அ.பதிவேடு ஆகியவற்றை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இணைய வழி சேவை மூலம் கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.