தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக்யோடு, கண் கருவிழி மூலம் நியாய விலைப் பொருட்களை மக்கள் வாங்கி செல்லும் வகையில் புதிய திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி, நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். முதியவர்கள், மாற்று திறனாளிகள் ரேஷன் கடைகளில் யார் பொருட்கள் வாங்க வேண்டுமென யாரை பரிந்துரை செய்கிறார்களோ மாவட்ட வழங்கல் அலுவலர்கள் முடிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், பயோமெட்ரிக்யோடு, கண் கருவிழி மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக முழுவதும் 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது . விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.