மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு 7.54 மணிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், புனேவில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, மும்பையில் உள்ள கூகுள் நிறுவன அதிகாரிகள் உடனடியாக மும்பை பெருநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அந்த தொலைப்பேசி அழைப்பை கண்காணித்தனர். இதையடுத்து, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு, மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு கூகுள் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தச் சோதனையில் கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது குறித்து புனே துணை போலீஸ் ஆணையர் விக்ரந்த் தேஷ்முக் கூறுகையில், “புனே கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்தோம். இதில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அழைப்பு போலியானது என்பது தெரியவந்தது. அழைப்பு செய்தவர் குறித்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அது ஹைதராபாத் என்பது தெரியவந்தது. அந்த எண்ணுக்குரிய முகவரியை தொடர்பு கொண்டபோது, அந்த அழைப்பு செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத் போலீஸாருடன் இணைந்து புனே போலீஸாரும் ஈடுபட்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.