காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலுக்கான கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே, அதாவது பிப்ரவரி 7 அன்று ரோஜா தினத்துடன் தொடங்குகின்றன. இதை கருத்தில் கொண்டு, தாய்லாந்து அரசு இலவச ஆணுறைகளை வழங்க உள்ளது.. பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் இள வயது கர்ப்பம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் 95 மில்லியன் இலவச ஆணுறைகளை வழங்க முடிவு செய்துள்ளது..
உலகளாவிய சுகாதாரத் திட்டத்தின் தங்க அட்டை வைத்திருப்பவர்களுக்கு வாரத்திற்கு 10 ஆணுறைகளை ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் என்று தாய்லாந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரச்சடா தனாடிரெக் கூறினார். ஆணுறைகள் 4 அளவுகளில் கிடைக்கும் என்றும், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முதன்மை பராமரிப்புப் பிரிவுகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் “தங்க அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச ஆணுறைகளை வழங்குவதற்கான பிரச்சாரம் நோய்களைத் தடுக்கவும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைத் தடுப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது..” என்று தெரிவித்தார்..
சமீப காலமாக தாய்லாந்தில் பால்வினை நோய்கள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 15 முதல் 19 வயது மற்றும் 20 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் பாலியல் தொடர்பான நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய அரசாங்க தரவுகளின்படி, கிட்டத்தட்ட 70 மில்லியன் தாய்லாந்தில் சுமார் 50 மில்லியன் மக்கள் அரசாங்கத்தின் உலகளாவிய சுகாதாரத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர், இது ‘தங்க அட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது. பொது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சில மருத்துவ சேவைகளைப் பெற தங்க அட்டை பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.