துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய துருக்கியில் 2-வது நாளாக நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 8,300ஐ தாண்டியுள்ளது. இடிபாடுகள் அப்புறப்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபட நேரம் எடுப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தது விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் யாவுசலி என்ற பகுதியில் பிறந்தவர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான் (28). இவர் கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்தவர். துருக்கியின் Yeni Matalyaspor என்ற கிளப்பின் பிரதான கோல் கீப்பராக விளையாடி வந்த அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான், நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அதேவேளை, அவரது மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கோல்கீப்பரின் மரணத்திற்கு கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கானா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சுவும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கினார். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.