கேரள மாநிலத்தில் முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி, உடல்நலக்குறைவால் காலமானார்.
சிறிது காலத்திற்கு முன்பு வரை தகவல் பரிமாற்றத்திற்கு தபால்களே பெரும்பாலும் பயன்பட்டன. அவரவர் சொந்த கையெழுத்தில், விரும்புபவர்கள் முகவரி தேடி தபால்காரர்கள் மூலம் பயணித்து வரும் கடிதங்களை பெற காத்துக் கிடந்த காலங்கள் உண்டு. செல்போனின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு தபால்காரர்கள் நினைவுகளே இந்த கால குழந்தைகளுக்கு இல்லை எனலாம்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் முதல் பெண் தபால்காரராக கே.ஆர்.ஆனந்தவல்லி (90) என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது கணவர் ராஜன். இந்த தம்பதிக்கு தனராஜ் என்ற மகன் உண்டு. கணவர் ராஜன் ஓய்வு பெற்ற ஆசிரியர். பட்டதாரியான கே.ஆர்.ஆனந்தவல்லி, ஆலப்புழா மாவட்டத்தில் அமைத்துள்ள தத்தபள்ளி தபால் நிலையத்தில் பெண் தபால்காரராக பணியில் சேர்ந்தார். இதன் மூலம் கேரள மாநிலத்தின் முதல் பெண் பெண் தபால்காரர் என்ற பெருமையை பெற்றார். அங்கிருந்து ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் தபால்காரராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கே.ஆர்.ஆனந்தவல்லி கடந்த 1991ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஆலப்புழாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாகவும் உடல்நிலை பாதிப்பு காரணமாகவும் கே.ஆர்.ஆனந்தவல்லி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கே.ஆர்.ஆனந்தவல்லி தனது வீட்டில் காலமானார். இதைத்தொடர்ந்து கே.ஆர்.ஆனந்தவல்லியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.