பழம்பாசி, சுண்டவேரின் அற்புத குணங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

ஆதிவாசிகளின் மருத்துவமே அனைத்து மருத்துவத்திலும் ஆற்றல் மிகுந்தது. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் ஆதிவாசிகள் வசிக்கிறார்கள். இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான்.

அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் கஷாயங்களில் முக்கிய இடம் பெறுபவை இவை தான். வேந்தரம் கஷாயம், தசமூலாரிஷ்டம், ஜிரகரிஷ்டம் போன்ற இந்த மூலிகை தயாரிக்க முக்கியப் பங்காற்றுவது சுண்ட செடி வேர், பழம்பாசி வேர் எனும் இரண்டு வேர்கள்.

இந்த வேர்கள் அதிகமாக அறியப்படுவது ஆதிவாசி மக்களால் மட்டும் தான். அவர்களைத் தவிர, இந்த வேர்கள் பற்றி அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மகத்துவம் இந்த வேர்களுக்கு இருக்கிறது. மலைப்பகுதிகளில் மட்டுமே இந்த வகை வேர்கள் அதிக அளவில் கிடைக்கின்றன என்றாலும் இவைகள் எந்த நிலத்திலும் வளரும் தன்மை கொண்டவை என்பதே இதன் சிறப்பு.


ஓவ்வொரு வருடமும், செப்டம்பரில் தொடங்கி, டிசம்பர் வரையிலான காலங்களில் இந்த வேர்கள் பறிக்கப்பட்டுச் சேகரிக்கப்படுகின்றன. இந்த வேர்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் வேலைகளும் வரவேற்கத்தக்கவை. இரண்டு செடிகளையும் பறிக்கும்போது, அதில் உள்ள தாய் வேரை மட்டும் மண்ணில் விட்டு பறிக்கின்றனர். இதனால், அந்த வேர் செடி அடுத்த அறுவடைக்குத் தயாராகிறது. எளிமையான இந்த வேலை, அதிக வருமானத்தைக் கொடுப்பதால் காலை முதல் மாலை வரை இந்த வேரை சேகரிக்கும் வேலை தான் ஆதிவாசிகளுக்கு.

சுண்டவேர் : சாலை ஓரங்களில் கிடைக்கும் வேர்களான சுண்ட வேர், பழம்பாசி வேர் போன்றவைகளில் சுண்ட வேர் என்பது முட்கள் கொண்ட செடி. இந்தச் செடியின் மொத்த பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டது. இலை உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த இலையைப் பறித்துக் குறைந்த அளவில் நீர் விட்டு சுண்ணாம்புடன் சேர்த்து கசக்கிப் பிழிந்து கசக்கிய இலையைக் காயத்துடன் சேர்த்துக் கட்டுவார்கள். இதனால், காயத்தின் விஷம் முறிக்கப்பட்டு வேகமாகக் குணமடைகிறது.

இந்தச் செடியின் காயும், கனியும் பல் வலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பழுத்த கனியை பூச்சிப்பல் கொண்டவர்கள், பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி உள்ள பல்லில் வைத்து அழுத்தவேண்டும். இப்படிக் கடிப்பதின் மூலம் மிகவும் கசப்பு வாய்ந்த அந்தச் சாறு பல்லினுள் இறங்கி பூச்சியைக் கொல்வதுடன் பல் வலியையும் குணப்படுத்தும்.

இதன் வேர், ஒவ்வொரு வருடமும் சேகரிக்கப்பட்டுக் குறிப்பிட்ட நபர்களின் மூலம் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை, கோயம்புத்தூர் பார்மசி போன்ற கேரள மூலிகை மருத்துவச் சாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குப் பல வழிமுறைகளின் மூலம் மருத்துவக் கஷாயமாகத் தயாரிக்கப்படுகிறது.

பழம்பாசி : பழம்பாசி என்ற செடியும் பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்தச் செடியின் இலையையும் நன்றாக அரைத்து கூழாக்கி, தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் உடலின் சூட்டை குறைத்து முக அழகுக்கும் வழி வகுக்கிறது. மேலும், உடல் வெப்பத்தைச் சம நிலையிலும் வைக்கிறது.

இதன் வேரும் சேகரிக்கப்பட்டு, தகுந்த மருத்துவச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டுக் கஷாயமாகத் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயங்கள் மருத்துவச் சாலைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என்றாலும், தமிழகத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் இந்த மூலிகை செடிகள் கேரளத்துக்குக் கடத்தப்படுவது நமது அரசு துறை அதிகாரிகள் ஏனோ அறியவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

Next Post

மரம் ஒன்று !! பலன் பற்பல!! என்ன மரம் தெரியுமா?

Fri Nov 4 , 2022
மரம் ஒன்றுதான் ஆனால், அதன் அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு நன்மை அளிக்கும் மூலிகையாக நமக்கு உதவுகின்றது. கிராமப்பகுதிகளில் கிடைக்கும் கல்யாண முருங்கை எனப்படும் மரம்தான் அது… கல்யாண முருங்கையின் பூ, விதை, இலை, பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது. இதனை முள்முருங்கை என்ற பெயரும் உண்டு. கல்யாண முருங்கை இலைச்சாற்றை 5 மிலி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் […]

You May Like