பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளிஅவரைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என கடுப்பாக பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கோவை கார் வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது. கோவை காவல் தலைமைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி முழு அடைப்பு அறிவிக்க முடியும்? கட்சியை சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் முழு அடைப்பு அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் முழு அடைப்பு என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்?. கட்சி நிர்வாகிகளிடம் பேசி முழு அடைப்பை ரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும்.
ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.