உத்திரப் பிரதேச மாநிலத்தில் தனது கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத் முராத் நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ஷம்ஷாத். இவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான கிளினிக் ஒன்றை வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் தனது கிளினிக்கில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார் ஷம்ஷாத். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் மருத்துவர் ஷம்ஷாத்தை சுட்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த மருத்துவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காசியாபாத் போலீசார் மருத்துவரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் இருந்த நேரடி சாட்சிகளிடம் மருத்துவரை துப்பாக்கியால் சுட்ட நபர் போற்றி விவரங்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு உள்ளவர்கள் அளித்த தகவல்களின்படி அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவரை சுட்டு விட்டு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.