கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் மீது அரசு பேருந்து மோதியது இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மரத்தில் மோதி சுக்கு நூறானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய இணைப்பு சாலையாக இருப்பது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகும். மதுரை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த சாலை வழியாகவே செல்லும் என்பதால் இந்த தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதன் காரணமாக அடிக்கடி இந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை கூட திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது அரசு பேருந்து வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒரு குழந்தை மற்றும் இன்னொரு நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் இருக்கக் கூடிய பனிமூட்டத்தின் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.