காஷ்மீரில் இருந்து ரஜௌரிக்கு உரிமையாளரை சுமந்து சென்றதால், குதிரை ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரானா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, நோய்த்தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவது தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் குதிரை ஒன்றை தனிமைப்படுத்திய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஜம்மு&காஷ்மீரில் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரானா பாதிப்பு அதிகம் உள்ள சிகப்பு மண்டல பகுதிகளாகும். இந்த சுழலில், ஊராடங்கு காரணமாக சோபியான் மாவட்டத்தில் சிக்கியிருந்த ஒருவர் தனது சொந்த ஊரான, கொரானா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு பச்சை மண்டலமாக உள்ள ரஜௌரிக்கு செல்ல விரும்பியுள்ளார்.

இதன் காரணமாக சோபியான் மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல், கடந்த திங்கட்கிழமை இரவு குதிரையில் புறப்பட்ட அந்த நபர் முகல் சாலை வழியாக ரஜோரியை வந்தடைந்துள்ளார். கடும் குளிர் காரணமாக அந்த சாலை மூடப்பட்ட நிலையில், எந்த வாகன தொந்தரவும் இல்லாமல் குதிரையில் மகிழ்ச்சியாக சவாரி செய்துள்ளார். பச்சை மண்டலமான ரஜோரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்திய போலீசார் உடனே, குதிரையையும், எஜமானரையும் கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் முடிவு வரும் வரை எஜமானர், தனிமை வார்டில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வரும் வரை வீட்டில் மற்ற விலங்குகளிடமிருந்து குதிரையை தனிமைப்படுத்தி வைக்க வேண்டுமென அதன் எஜமானரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் வாயில் பாலிதீன் போட்டு மூடப்பட்ட நிலையில், லாடத்தில் தனியாக கட்டி, குதிரை ‘குவாரன்டைனில்’ வைக்கப்பட்டு உள்ளது.